தங்கும் விடுதிக்கு வந்த உடன், உறங்குவதற்க்கு முன், அருகிலுள்ள சுற்றுலா இடங்களைப்பற்றி இணையத்தில் படிக்க ஆரம்பித்தேன். தர வரிசையில் ஐந்தாவது அல்லது ஆறாவது இடத்தில் இருந்த கசோல்( kasol) என்ற இடம் பொருத்தமாக தோன்றியது. அது மனாலியிலிருந்து எண்பது கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ளது. Kullu வழியாகச் செல்ல வேண்டும். Bhuntar விமான நிலையத்திலிருந்து முப்பது கிலோமீட்டர்கள். கசோலுக்கு அருகில் கீர்கங்கா( Kheerganga) என்ற புகழ் பெற்ற trek க்கும் உள்ளது.
மே 1ம் தேதி
காலை ஒன்பது மணிவாக்கில் வாடகை மோட்டார் சைக்கிளை எடுத்து வந்து (Royal Enfield- Meteor) சாமான்களை ஒரு பையில் வைத்து வண்டியில் கட்டினேன். சூட்கேஸை விடுதிலேயே வைத்து விட்டேன்; நான்காம் தேதி- திரும்பி போகும்போது எடுத்துக் கொள்ளலாம் என்று.
குளிர் பிரதேசங்களில் மோட்டார் சைக்கிளில் சுற்றுவது ஒரு இன்பமான அனுபவம். வானம் மேக மூட்டத்துடன் அவ்வப்போது தூறிக் கொண்டிருந்தது.
மேகங்கள் விலகும் போது மட்டும் பனி மூடிய சிகரங்கள் தெரிந்தன. இடதுபுறத்தில் பியாஸ் ( beas) நதி சாலையை ஒட்டி ஓடிக்கொண்டிருந்தது. கோடைக்கால ஆரம்பம் என்பதால் மிதமான தண்ணீரே இருந்தது. அதில், river rafting செய்ய நிறைய இடங்கள் இருந்தன. திரும்ப வரும்போது செய்துகொள்ளலாம் என நினைத்துக்கொண்டேன். ஒரு மணி நேர பயணத்திற்க்கு பிறகு டீ குடிப்பதற்க்காக குலு விற்க்கு அருகில், ஒரு சாலையோர கடையில் நிறுத்தினேன். கனமான மழை பிடித்துக் கொண்டது. அரை மணி நேரம் அந்தக் கடையிலேயே அமர்ந்து மழையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். மழை சற்று குறைந்ததும் மழைக்கான உடைகளை ( ரைடிங் ஜாக்கெட் மற்றும் பேண்ட்டின் மீது) அணிந்து கொண்டு, பையையும் ஒரு உறை போட்டு மூடிக்கொண்டு கிளம்பி விட்டேன். மழையில் வண்டி ஓட்டுவதும் ஒரு நல்ல அனுபவம்தான். Bhuntar ஐத் தாண்டி மலைப்பாதையில் நுழைந்ததும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் கீழிறங்கிக் கொண்டிருந்தன. அப்போது,இடது புறம் பார்வதி ஆறு ஓடிக்கொண்டிருந்தது(அது bhuntar க்கு அருகில் பியாஸ் ஆற்றுடன் கலக்கிறது). இரண்டு மணிக்கெல்லாம் கசோல் சென்று சேர்ந்தேன்.
கசோல் (Kasol)
கசோல் ஒரு நவீன வசதிகள் கொண்ட கிராமம். ஹிப்பி( hippie ) கலாச்சாரத்து பெயர் போனது. வீதிகளிலும், கபே ( cafe) க்களிலும் மேற்க்கத்திய இசை ஒலித்துக் கொண்டிருந்தது. இங்கு பல இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதுண்டு. வெளி நாட்டவர்கள் குறிப்பாக இஸ்ரேலைச் சேர்ந்தவர்கள் இங்கு நீண்ட காலம் குடியேறி வாழ்ந்திருந்தனர். அதற்க்கு தாராளமாக கிடைத்த கென்னாபிஸ் , ஹாஷிஷ் ஒரு முக்கிய காரணம். அருகிலுள்ள “மலானா(malana)” கிராமத்திலிருந்து தயாரிக்கப்படும் “ malana cream” என்ற ஹாஷிஷ் (hashish)உலகின் முதல் தர கென்னாபிஸ் என்று பிரபலமாகி விட்டது. அதற்க்காகவே பல வெளி நாட்டவர் கசோலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்படி வந்தவர்களில் சுமார் இருபது பேர் காணாமல் போனதால் அரசாங்கம் தலையிட்டு இப்பொழுது அவர்கள் வருகை குறைந்துவிட்டது(High on Kasol என்ற புத்தகம் அப்படி மறைந்து போனவர்களைப்பற்றி எழுதப்பட்டது). நான், நீண்ட முடியுடன் சில ஹிப்பி ஐரோப்பியர்களை கசோலின் வீதிகளில் பார்த்தேன். சிலர் உணவகங்கள் நடத்திக் கொண்டுள்ளனர்.
கசோலில் தங்குவதற்க்கு சுமாரான வசதியுள்ள நிறைய விடுதிகள் உள்ளன. ஓய்வு எடுத்துவிட்டு நாளை கீர்கங்கா trek செல்லவேண்டும்.
மே 2ம் தேதி
கீர்கங்கா trek ( Kheerganga)
கசோலிலிருந்து பதினைந்து கிலோமீட்டர்கள் தூரத்திலிருள்ள பர்சைனி ( Barshaini) என்ற இடத்திலிருந்துதான் மலை ஏற வேண்டும். கசோல் - பர்ஷைனி பைக் பயணத்தின் போது வானம் சற்று தெளிவாக இருந்தது; பனி மூடிய சிகரங்களை தெளிவாகப்பார்க்க முடிந்தது. பர்சைனியில் வண்டியை பாதுகாப்பாக நிறுத்த நிறைய கடைகள் இருந்தன.
சுமார் பத்து மணி அளவில் மலை ஏறத்துவங்கினேன். பனிரெண்டு கிலோமீட்டர்கள் trek செய்ய வேண்டும்.
இது, Indiahikes என்ற தளத்தின்படி அனுபவமில்லாதவர்கள் கூட செல்லத்தக்க “easy to moderate difficulty”உடைய trek.
ஒரு இளைஞனும் மூன்று இளைஞிகளும் கொண்ட ஒரு குழு, கைடின்( guide) உதவியுடன் சற்று முன் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களைத்தவிர வேறு ஆட்கள் யாரையும் பார்க்க முடியவில்லை. நான் அவர்களைக் கடந்து செல்லும் போது அந்த கைடுடன் வந்த நாய் அவர்களை விட்டுவிட்டு என்னைத்தொடர ஆரம்பித்தது. முதலில் அருகில் வந்து நுகர்ந்து வாலாட்டி அறிமுகம் செய்துகொண்டது. அதிசயமாக எனக்கு பயம் ஏற்படவில்லை;அதன் தலையை வருடினேன். ஆளில்லா காட்டில்( சிறிது நேரத்திற்க்குப்பிறகு அந்தக் குழு தென்படவே இல்லை) அதன் துணை மனதுக்கு மகிழ்ச்சியளித்தது.
மலை ஏற்றம் சுலபமாகத்தான் இருந்தது. அடர்ந்த மரங்கள் சூழ்ந்த ஒற்றையடிப்பாதை - ஆட்கள் நடந்து உருவானது. பல இடங்களில் மரம் விழுந்தோ மண் சரிந்தோ அது பல புதிய கிளைப் பாதைகளுடன் சென்றுகொண்டிருந்தது. செங்குத்தாக ஏறாமல் மிக மெதுவாகவே உயரம் அதிகரித்தது. மழையினால் பாதை வழுக்கலாக இருந்தது. சில இடங்களில் பாதுகாப்பு இல்லாமல் இடது பக்கம் மிக ஆழமாக - சரிவுடன் இருந்தது. அந்த ஆழத்தில் பார்வதி ஆற்றின் சலசலப்பு கேட்டுக்கொண்டிருந்தது.
ஒரு இடத்தில் “இந்த இடத்தில்தான் என் நண்பன் கவனக்குறைவால் இறந்தான். குறுக்கு வழிகளை தவிருங்கள்” என ஒரு தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது.
வழியில் சில சிற்றுண்டி கடைகள் இருந்தன. மழை அதிகரிக்கும் போது அவற்றில் தஞ்சம் புகுந்தேன்.
தனியாக காட்டில் நீண்ட நேரம் நடப்பது ஒரு தியான நிலையை உருவாக்கியது. பல கவிதைகள் மனதில் தோன்றிக்கொண்டேயிருந்தன. அவ்வப்பொழுது அதை மொபைல் நோட்டில் குறித்துக்கொண்டே நடந்தேன்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகள் உயிர்வாழும் தேவதாரு மரங்கள் ( deodar cedar) நிறைந்த வனம் அது. அதன் பாசி படிந்த வேர்கள் அதில் வெளிர் பச்சையாக துளிர்கள் - அதன் மக்கிய இலைகள் - சேற்றுடன் கலந்த பாதை - இவை அனைத்தும் சேர்ந்து ஒரு நவீன ஓவியமாகக் காட்சியளித்தது.
சட்டென்று மழை கனமாக பெய்ய ஆரம்பித்தது. அப்பொழுது காற்றில், மரத்தில், இலையில் ஒரு சிறு அசைவைக்கூட பார்க்கமுடியவில்லை. மழை பெய்யும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது.
மழையின்
சிம்பொனியில்
உறைந்து நின்றன
இலைகள்
மரங்கள்
வனம்
காற்று
காலம்
***
பாறை
சிலிர்த்துக் கொண்டது.
தழுவும் மேகம்
***
நீண்ட நாட்களுக்குப் பிறகு
பிடித்த நண்பனுடன்
நீண்ட நேரம் உரையாடினேன்
மெளனமாக.
தனிமை
****
தலையறுபட்ட
சோகத்தின்
விசும்பல்களைச்
சொல்லிக் கொண்டுதானிருக்கின்றன
மாடி வீடுகளில் வீற்றிருக்கும்
நாற்காலிகள்
***
நான்கு மணியளவில் உச்சியை சென்றடைந்தேன். தங்குவதற்க்கு ஏராளமான tents - camps இருந்தன.
நடப்பதை நிறுத்தியவுடன் குளிர் அதிகமாகத் தெரிந்தது. பனி மூடிய சிகரங்களின் அருகாமையும் ஒரு காரணம். மழை, ஈரம் இவையும் சேர்ந்து உடலை நடுங்க வைத்தன.
அங்கு ஒரு வெந்நீர் ஊற்று ( hot springs) உள்ளது. பயணிகள் உச்சியை அடைந்தவுடன் அந்த வெந்நீர் தொட்டியில் அமர்ந்து இளைப்பாறுவது வழக்கம். மழை ,குளிர் காரணமாக எவரும் தண்ணீரில் இறங்க துணியவில்லை. உணவருந்திவிட்டு சிறிது நேரம் கணப்படுப்பு ( fireplace) அருகில் அமர்ந்திருந்தோம்.
டென்ட்டில் இருந்த படுக்கை மற்றும் போர்வை எல்லாமே ஈரமாக இருப்பதாக தோன்றியது. குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது,நீண்ட நேரம். விடியற்காலை வானம் தெளிவாகும் என நம்பிக்கை இருந்தது. விரைவில் தூங்கி விட்டேன். பக்கத்து டென்டிலிருந்த பெண்களின்( திருமண விழாவிற்க்காக ஏதோ கிராமத்தை சேர்ந்த ஒரு குழு அங்கு தங்கியிருந்தது) பேச்சுக் குரலால் கண் விழித்தேன். காலை ஐந்து மணி. வானம் வெளுக்க ஆரம்பித்திருந்தது. தூறல் இல்லை. மேகமும் குறைவு. வெளியே வந்து பார்த்த போது, காலை அமைதியில் வெண் சிகரங்கள் பிரமாண்டமாக மிக அருகில் தெரிந்தன. அதன் முன், உலகம் மறந்து சிறிது நேரம் நின்றேன். இது போன்ற ஒரு சில அற்புத கணங்களுக்காகத்தானே வாழ்க்கை, என்று தோன்றிது.
பயணம் தொடரும்…


No comments:
Post a Comment