Friday, January 16, 2015

ரேக்கிங் : Ragging - "Ra..jing...jing..i...n...jing"

சிறுகதை

Yercaud   எக்ஸ்பிரஸ்  சென்னையை நோக்கி - மன்னிக்கவும்  மதராசை நோக்கி - (இந்த கதை நடந்த வருடம் 1990!)- மெதுவாக ஊர்ந்து  கொண்டிருந்தது.
எப்பொழுதும் போல் ஜன்னலோர இருக்கை. பகலின் சூடு தணிந்து இதமான இரவுக் காற்று முகத்தை வருடியது .தொலைவில் முழு  நிலா, ரயில்  நூலின் பட்டமாக(kite ) தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. தூக்கம் வரவில்லை. மனம், சில தினங்களுக்கு முன் நடந்த  அவன் தலை எழுத்தையே மாற்றக் கூடிய அந்த அதிர்ச்சியான விஷயத்தை விட்டு வர சிறு குழந்தையாய் அடம்பிடத்தது. 

அவன் பிறந்து வளர்ந்தது ஒரு  சிறிய கிராமத்தில். பத்தாம் வகுப்பு வரை படித்ததும் அங்குள்ள அரசு பள்ளியில்தான் - தமிழ் மீடியத்தில்  என்று தனியாக  சொல்லத்  தேவை இல்லை. சிறு வயதிலிருந்து படிப்பில் அவனுக்கு போட்டியாக யாருமில்லை. எப்பொழும் முதல் மதிப்பெண். நீ டாக்டர் ஆக வேண்டும் -  என்ற மந்திர சொல்லை திரும்ப திரும்ப கேட்டு - வாழ்க்கையில் வேறு இலக்கு ஏதும் இருந்திருக்கவில்லை.பிளஸ் ஒன் ,பிளஸ் டூ படிக்க சென்ற திருச்சி Bishop Heber  -லும் அதே நிலைமை தொடர்ந்தது. தமிழ் மீடியத்தில் எப்பொழும் அவனே முதல்.

இப்படி வானத்தில் பறந்து கொண்டிருந்த அவனை பூமிக்கு கொண்டுவரும் - இல்லை அதர பாதாளத்தில் தள்ளி விடும்  விதமாக அந்நிகழ்வு அமைந்துவிட்டது. பிளஸ் டூ வேதியியல் பாடத்தில்,மதிப்பெண் எதிர்பார்த்ததை விட குறைவாகக்  கிடைத்தது . அது ஏனென்று இன்றுவரை அவனுக்கு புரியவில்லை.

டாக்டர்  கனவு, நீர்குமிழியாய் நிமிடத்தில் மறைந்து போனது. கணக்கு பாடத்தில்  நல்ல மதிப்பெண் பெற்றும், தரமான  இன்ஜினியரிங் கல்லூரிகளில் இடம் கிடைத்தும், அவன் அப்பாவுக்கு அதில் இவனை சேர்க்க விருப்பமில்லை! அவனுடைய விருப்பத்தை யாரும் கேட்கவில்லை. கேட்டிருந்தாலும் அவனுக்கு அப்படி ஒன்று இருந்திருக்குமா என்பது சந்தேகமே.

அவனை veterinary doctor ஆக்குவது என முடிவானது. மெட்ராஸ் வேப்பேரியில்  உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் சேரத்தான்  இந்தப் பயணம் -  அவன் தந்தையுடன் .

வாழ்கையின் முதல் பாடமே இவ்வளவு கசப்பானதாக இருந்ததின் வருத்தம் அவனுக்கு. இருந்த ஒரே இலக்கும் மறைந்து போனதும் , காரிருளில்  நோக்கின்றி பயணிக்கும் பார்வை அற்ற பறவையாய்  தன்னை உணர்ந்தான்.

அவனுக்கு  கல்லூரி பற்றிய , குறிப்பாக மருத்துவக் கல்லூரி குறித்த அந்த வயதிற்கே உரித்தான வண்ணக்  கனவுகள் நிறைய இருந்தன. நன்றி : கோலிவுட் சினிமா.
இப்போது அவை அழுது வடியும் கருப்பு வெள்ளை  சிவாஜி படமாக மாறிப் போனது. "போனால் போகட்டும் போடா"- விதமாக!

மெட்ராஸ்க்கு வருவது  இது இரண்டாம் முறை. முதல் முறையின் பயண நினைவுகள் மனதில் பதியவில்லை- மிக சிறு வயதில் வந்தது. திருச்சி நகரத்தில் படித்திருந்தாலும், மெட்ராஸ் முற்றிலும் புதுமையானதாக  தெரிந்தது. பல பிரமாண்டமான அடுக்குமாடி கட்டிடங்கள் , பர பரப்பாக எங்கோ விரைந்து செல்லும் மக்கள், நாகரீகமான உடல் பாவனைகள்,  புரிந்தும் புரியாத ஆங்கிலம் - அவனுக்கு ஏனோ மெட்ராஸ்சை சுத்தமாக பிடிக்கவில்லை. அந்நகரம் தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை, மாறாக இழிவுபடுத்துவதாக, ஒருதுரும்பைப் போல்
உணரவைப்பதாக  தோன்றியது.

காலேஜ் மற்றும் hostel  admission முடிய சாயந்திரமாகிவிட்டது. அவன் அப்பா விடைபெற்று செல்லும்போது ஒரு இனம் புரியாத சோகம்,பயம் மனதில் குடிகொண்டது. அவனுடன், புதிதாய் சேர்ந்த நான்கு மாணவர்களுக்கு ஒரு hostel room தரப்பட்டது. Hostel வாழ்க்கை புதிதில்லை என்றாலும் முதல் கல்லூரி நாளை நினைத்து பரவசமும் ragging பற்றிய பயமும் ஒன்று சேர்ந்து அமைதியின்மை ஏற்பட்டது.அவனுடைய அறை நண்பர்களில் ஒருவன் ragging ன் சில எழுதப்படாத விதிகளை சொல்லிக்கொண் டிருந்தான். மீசையை மழிக்க வேண்டும் , அனைவையும் sir சொல்லி அழைக்க வேண்டும் , military style ல் salute அடிக்க வேண்டும்  என, ஒரு  நீண்ட நினைவில் நிற்க கடினமான rules களை அடுக்கிக் கொண்டே போனான் .

முந்திய இரவின் உறக்கமின்மையும்,மா நகரம் தந்த மிரட்சியும் சேர்ந்து நிம்மதியில்லா, பயங்கர கனவுடன் கூடிய அயர்ச்சியளிக்கும் தூக்கத்தைத் தந்தது.

மறுநாள் காலை -"இளைய நிலா பொழிகிறது, guitar இசை"- கனவா நினைவா என்ற குழப்பத்துடன் கண் விழித்தான். அறை நண்பன் ஒருவன் guitar-ரை இசைத்துக்கொண்டே பாடிக்கொண்டிருந்தான். மற்றவர்கள் மீசை மழித்து அந்நியர்களாக காட்சியளித்தனர்.  அவனும் அந்நியனாக  ரெடி ஆகிக்கொண் டிருந்த பொழுது , மற்றொரு அறை நண்பன் பல சிறிய, பெரிய bottle களுடன் கண்ணாடி முன் நின்று கொண்டு புஸ் புஸ்ஸ் ....என்று புகை கிளப்பிகொண்டிருந்தான். அதன் பெயர்களை தெரிந்து கொள்ளவே சில மாதங்கள் தேவைப்பட்டது- Deodorant ,body lotion , perfume , sun screen lotion...

நண்பர்களுடன் சேர்ந்து முதல் நாள் வகுப்புக்கு சென்றான். Kollywood  பட நாயகனாக தன்னை பாவித்து கடைசி பெஞ்சாக பெண்களை பார்க்க வசதியான இடத்தை தேர்வு செய்தான். பையன்களின் பார்வை பெரும்பாலான நேரம் பெண்களை சுற்றியே தேனீயாய் வட்டமிட்டது.

முதன்முறையாக பல நாட்களுக்கு பின் மகிழ்ச்சியாக உணர்ந்தான்.சினிமா பொய்யில்லை. கால்நடை மருத்துவக்கலூரியும் நன்றாகத்தான் இருந்தது.பெண்களை நோட்டமிடும் அந்த முக்கியமான விஷயத்தை தொடர்ந்து கொண்டே என்ன பாடம் நடத்துகிறார் ஆசிரியர் என்பதைப்  பார்த்தான். ஒன்றுமே புரியவில்லை. அவர் பேசிய ஆங்கிலம், அதன் பொருள் என்று  எல்லாமே வேற்றுலக பாஷையாக காதில் விழுந்தது. அவன் படித்த நுரையீரல்,கல்லீரல்,மண்ணீரல்,தமனி சிரை  - இவைகளுக்கெல்லாம்  என்ன ஆனது???!!!

பெரும்பாலான படிப்பாளி மாணவர்கள்  notes எடுத்துக் கொண்டிருந்தார்கள்.சரி அடுத்த lecture ரைப் பார்ப்போம் என்றால் , எல்லாமே  அப்படித்தான் இருந்தது. இரண்டாவது பேரிடி. தமிழ் mediumத்தில்  படித்த அவனுக்கு ஆங்கிலத்தில் ஏதும் விளங்கவில்லை. முதன் முறையாக படிப்பைப் பற்றிய பயம் வந்தது. தன்னுடைய திறமைப் பற்றிய சந்தேகம் எழுந்தது. என்ன செய்வது?எப்படி சமாளிக்க போகிறோம்?மிகப் பெரும் கேள்விக்குறி பூதமாக பயமுறித்தியது .

Lunch காக  Hostel messக்கு  வந்தனர். சீனியர் மாணவர்கள் நுழைவாயிலிலேயே புள்ளி மானைக் கண்ட புலியாய்ப்  பாய்ந்தனர்.

Ragging ஆரம்பம்....

பெரும்பாலானவர்கள் இரண்டாம் ஆண்டுமானவர்கள். கடந்த ஆண்டு தாங்கள் அனுபவித்ததை வட்டியும் முதலுமாக திருப்பித்  தரும் வேகத்தில் இருந்தனர்.

முதலில் விளையாட்டாய், சிரிப்பை வரவழைக்கும் விதமாகத்தான் தோன்றியது.என்னடா சிரிப்பு என்று கன்னத்தில் பளார் அறை விழுந்ததும்தான் உண்மை நிலவரம் புரிந்தது. அடித்தவன் உயரம் குறைவாக ஒல்லியாக இருந்தான் . இவனை அறைய எம்பி குதிக்க வேண்டியிருந்தது. அடித்தவனை முறைத்தான். என்னடா முறைப்பு என்று மறுமடியும்  - பளார்! மறு கன்னத்தில் எம்பி அறைந்தான் . வாழ்க்கையில் வாங்கிய முதல் மற்றும் இரண்டாம் அறை.


                                              


அடுத்து ஒரு கும்பல் அவர்களை  Basketball  ground க்கு அழைத்து சென்றது.
அது ஒரு வரலாற்று சிறப்புமிக்க  இடம். ப - வடிவ Hostel கட்டிடங்களுக்கு நடுவில் அமைந்திருந்தது. அந்த ப-வில் ஒன்று girl 's Hostel ,மற்ற இரண்டும் boy's Hostel .

தன் வீர சாகசங்களை, தான் விரும்பும் கன்னியர்கள்  முன் மேடையேற்றும், senior மாணவர்களின் விளையாட்டு மைதானமாக அது மாறியிருந்தது . Girl's Hostel ஜன்னலிலுருந்து  நிறைய முகங்கள் ஆர்வத்துடன் ஆட்டத்தை ரசித்த வண்ணமிருந்தன . ஒரு வேப்ப மரம் அந்த பெண்களுக்கு  வசதியாக மற்றவர்கள் அவர்களை தெளிவாக பார்க்கா வண்ணம் உதவியது.

அவர்களை ரயில் தொடர் பெட்டியாக மாற உத்தரவிட்டான் அவனை  அறைந்த அந்த senior மாணவன். பிறகு ஒரு பீடியை அவன்  வாயில் பற்றவைத்துவைத்து - நீதான் engine ,  புகை விடு பார்க்கலாம் என்றான்.பல பீடிகளின் சக்தியால் ஊர் ஊராக சென்றது அந்த வண்டி.

அடுத்து ஒருவன் ,"சேர் போடு"என்றான் . அதாவது chair இருப்பதாக கற்பனை செய்து கொண்டு காற்றில் உட்கார வேண்டும். சிறிது நேரத்தில் கால்கள் நடுங்க ஆரப்பித்தன. சிலர் chair ல் இருந்து கீழே விழுந்தனர்.

இன்னொருவன் நீச்சலடிக்க தெரியுமா? - என்றான். எதுக்கு கேட்கிறான் என புரியாமல் தெரியும் என்று  தலை ஆட்டினான்.
அப்போ அடி - என்று தரையைக் காட்டினான். அப்பொழுதுதான் புரிந்தது. நீரில்லா தரையில் நன்றாக நீந்தினான்.

"Ragging குக்கு spelling சொல்லு "- இன்னொருவன்.

'R ...A ...G ...G ...I ...N ...G  '- என்றான்.

அப்படியில்லை. அங்க பார் அவன் எப்படி சொல்லறான்னு- என்று ஒரு ஜூனியர் மாணவனைக் காட்டினான்.

அவன்   "R ...A ...Jing ...Jing ...I ...N ...Jing " என்று jing சொல்லும்பொழுதெல்லாம்  எகிறி எகிறி குத்தித்தான். இவனும் அவனைப்போலவே தாவித் தாவி spelling பயின்றான்.

இப்படி அவர்களின்   குரங்காட்டம் பல மணி நேரம் தொடர்ந்தது. யாரும் lunch சாப்பிடவில்லை.அதை யாரும் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.
இருட்ட ஆரம்பித்திருந்தது. இனிமேல் ஜன்னல் நாயகிகளுக்கு தெரியாது என்பதால் அங்கிருந்து அவர்களை அப்புறப்படித்தி  தங்கள் ரூமிற்கு அழைத்து சென்றனர் சீனியர் மாணவர்கள்.

ஒரு சில புத்திசாலி மாணவர்கள் அழ ஆரம்பித்திருந்தனர். அவர்களையெல்லாம் போதும் இன்றைக்கு என அனுப்பிவிட்டனர். இதைப்பார்த்து வேண்டுமென்றே சிலர் அழுதனர் .

அவனுக்கு அழுகை வரவில்லை. கோபம், எரிச்சல், இயலாமை என பல உணர்சிகளின் கலவை, வெடிக்க தயாராகும் எரிமலையாக உள்ளுக்குள் சுழன்று கொண்டிருந்தது.

ரூமிற்கு அழைத்து சென்று, முதல் வேலையாக எல்லாரையும்  நிர்வாணமாக்கினர். இசை மிகுந்த இரைச்சலுடன் ஒலிக்க ஆரம்பித்தது. Dance  என்ற கட்டளை பிறந்தது.பல பாடல்களுக்கு நடனமாடினார்கள்.

Hockey , Football என indoor ராக்கிங் பல கற்பனைகளில் தொடர்ந்த படியே இருந்தது.

அவமானம், பசி, அடிவாங்கிய இடங்களில் வலி -  வெகு சிலரே அழாமல் அவனுடன் இருந்தனர்.

சில senior மாணவர்கள் வெளிப்படையாகவே , அழுதால் விட்டுவிடுவோம் என அறிவித்த்தனர். அவனைத்தவிர எல்லாரும் நிஜமாகவோ, பொய்யாகவோ ஒவ்வொருவராக அழுது தப்பித்துவிட்டனர்.

அவனுக்கு முயன்றும் அழுகை வர வில்லை.

"டேய் இவன்தாண்டா என்னைய முறைச்சது'' - அதே சீனியர் மாணவன்.

 மறுபடியும் "பளார்"- அவர் அறை specialist போல - பாவம் வேறு  ragging எதுவும் அவர் செய்ய முயலவில்லை!

"டேய் விடுறா...பாவம் "- எனக்கு  சப்போர்ட்டாக ஒருவன்.

"டேய் நீ எந்த ஊரு"

ஊர் பெயரை சொன்னான்.

"அப்பா பேர் என்ன"- சொன்னான்.மறுபடியும்- "பளார்" .

"தமிழ் நடிகைகளில் புன்னகை  அரசி யார்?"- K R விஜயா என்றான்.

"நடிகைக்கு initial , அப்பாவுக்கு இல்லையா?"- அப்பொழுதுதான் அந்த அறைக்கு காரணம் புரிந்தது.

"தாத்தா பேர் என்ன" - சொன்னான் - "தாத்தாவின் அப்பா பேர் என்ன?"

சாதி பெயரை தெரிந்துகொள்ளத்தான் இந்த பெயர் நாடகம் என்பது பல நாட்களுக்குப்  பிறகுதான் தெரிந்தது. college election க்காக இப்பொழுதிருந்தே குரூப் சேர்க்க ஆரம்பித்திருந்தனர்.

"எந்த school" - Bishop Heber .

இதைக்கேட்டவுடன் சந்தோஷத்தில் ரெண்டுபேர் துள்ளி குதித்தனர்.

  "டேய் நம்ம school s டா " - என்று பாசத்துடன், ragging போதும் என மற்றவர்களை சமாதானப் படுத்தினர். உடை அணியவைத்து தனியாக அழைத்துச்  சென்றனர்.

அவர்களில் ஒருவன் மிக இரக்கமாக ,"சாபிட்டாயாடா " என்று கேட்டான்.
அவனுக்கு பேசக்கூட சக்தியில்லை. இல்லை என்று தலையாட்டினான்.

இரவு பத்து மணியாயிருந்தது. Dinner  முடிந்து messஐ  மூடிவிட்டார்கள்.

"டேய் பாவண்டா , hotel லுக்கு கூட்டிட்டு போவோம் வாடா" - என்று அருகிலுள்ள restaurant க்கு அழைத்து சென்றனர்.

 "யாருடா  அடிச்சது , கன்னம் இப்படி சிவந்து வீங்கியிருக்கு"....  பரிவாக  சகோதரர்களைப்போல பேசினர் .

உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த எரிமலை பொங்கியது.

எவ்வளவு அடக்கியும் முடியாமல் சத்தமாக ஓ வென்று அழ ஆரம்பித்தான்.

ஒன்றும் புரியாமல் திகைத்துபோய் நின்றனர் அந்த senior மாணவர்கள் ரெண்டு பேரும்.

                                                  ***************
(பின்குறிப்பு: இந்த கதை உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு எழுதியது. 90%உண்மை. 10% கற்பனை. கதையின் நடுவில் வரும் சித்திரம் internetலிருந்து எடுத்தது. )



Cheers !

16-01-15,
8:36 am,
Chennai.