வாழ்வின் அற்புத கணங்களாக உணர வைப்பது நம் எதிரில் இருக்கும் காட்சிகள் மட்டுமில்லையே. நம் மன நிலையும் சேர்ந்துதானே. சலிப்பான அன்றாடத்திலிருந்து விலகிச் செல்வது அந்த மன நிலையை அடைய உதவுகிறது என நினைக்கிறேன்.
சிறிது நேரத்தில் மீண்டும் மேக மூட்டமாகி தூற ஆரம்பித்தது. ஒன்பது மணியளவில் கீர்கங்காவிலிருந்து இறங்க ஆரம்பித்தேன். பர்ஷைனியிலிருந்து இங்கு வர, போக இரண்டு பாதைகள். ஒன்று கிராமத்து மக்கள் உபயோகிக்கும் பாதை. இரண்டாவதாக ஒரு பாதை உண்டு. அதில்தான் நான் மலை ஏறிவந்தது. இறங்கும்போது அந்த கிராமத்து மக்கள் பாதையில் செல்ல முடிவெடுத்தேன்.
இறங்குவது, ஏறுவதைவிட சவாலாக இருந்தது. மழை ஈரம் சேர்ந்து வழுக்கியது. கவனமாக ஒவ்வொரு அடியையும் வைத்தேன். இந்த வழியில், மலை ஏறுபவர்கள், கிராமத்து மக்கள் என நிறைய ஆட்களைப் பார்க்க முடிந்தது. ஒரு இடத்தில், அவர்களின் நீண்ட வரிசை, ரயில் வண்டி மலை ஏறுவதைப்போல வளைந்து நெளிந்து போய்க்கொண்டிருந்தது. அதைப்பார்க்கும் போது “எவரெஸ்ட் சிகரம் ஏற வரிசையில் நிற்க்கும் மக்கள் “என்ற ஒரு பிரபலமான புகைப்படம் நினைவிற்க்கு வந்தது.
சில இடங்களில் பாதை செங்குத்தாக இருந்தது. இவ்வழியில் ஒரு கிராமமும் உண்டு. கிராமத்து வீடுகள், கற்களையும் மரக்கட்டைகளையும் மட்டுமே வைத்து கட்டப்பட்டிருந்தன. அக்கிராமத்தில் ஆட்களையே பார்க்க முடியவில்லை. எங்கும் வறுமை காட்சியளித்தது. அந்த வீதிகளில் நடக்கும் போது இனம் தெரியாத சோகமே ஏற்பட்டது.
இக்கிராமங்களைப் பற்றி வித்தியாசமான பல விஷயங்களை கேள்விப்பட்டேன். அவர்கள் வெளி ஆட்கள் யாரையும் தொட மாட்டார்கள். பொருட்களை நமக்கு தர வேண்டும் என்றால் அதை கீழே போட்டுவிடுவார்கள். நாம்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். அங்கு இருக்கும் கோயிலையும் கடவுளையும் கூட யாரும் தொடக்கூடாது. சூரியன் மறையும் முன் வெளி ஆட்கள் கிராமத்து எல்லைக்கு அப்பால் போய்விட வேண்டும். அங்கு தங்க அனுமதியில்லை.
தங்கும் விடுதி சென்று சேர மாலை நான்கு மணியாகிவிட்டது. சுற்றிப்பார்க்க நாளை இன்னும் ஒரு நாள் இருக்கிறது. பக்கத்தில் இருக்கும் மலானா (malana),
தோஷ்( Tosh) போன்ற கிராமங்களுக்குச் செல்வதா, அல்லது மனாலிக்கு அருகில் இருக்கும் அதுல் டனல்( Atul Tunnel), சோலாங் பள்ளத்தாக்கு ( solang valley) செல்வதா என முடிவு செய்யவேண்டும். Rohtang pass பாதை அப்போது திறக்கப்படவில்லை.
மே 4ம் தேதி
திரும்பிச் செல்ல ஐந்தாம் தேதி மாலை ஏழு மணிக்கு சண்டிகரிலிருந்து விமானம். நான்காம் தேதி இரவே மானாலியிலிருந்து சண்டிகர் செல்ல HRTC பேருந்தில் முன்பதிவு செய்தேன். ஐந்தாம் தேதி காலை புறப்பட்டால், வழியில் ஏதாவது காரணத்தினால் தாமதமானால், விமானத்தை தவற விட நேரிடும், என்பதால். மலைப்பாதையில் இரவு பயணம். தவிர்க்க முடியவில்லை.
அருகிலிருக்கும் கிராமங்களுக்கு செல்ல ஆர்வமில்லாததால் மனாலி திரும்ப முடிவெடுத்தேன்.
அவசரமில்லாமல் தாமதமாக விழித்து, தயாராகி பனிரெண்டு மணி அளவில் மனாலி நோக்கிப் புறப்பட்டேன். காலையிலிருந்தே வெயிலடித்தது. வானம் மேகமில்லாமல் தெளிவாக இருந்தது.
வழியில் குலு( kullu)வுக்கு அருகில் பியாஸ் நதியில் rafting செய்தேன். Rafting செய்யும் போது நனையாமலிருக்க, அதற்க்கான உடைகளை அணிந்திருக்கவேண்டும். அப்படி செய்யாததால் முழுவதும் நனைந்து விட்டேன். ஐஸ் போன்ற நீர். குளிரில் நடுங்க ஆரம்பித்தேன்.
மனாலியைக்கடந்து அதுல் டணலை நெருங்க நெருங்க குளிர் இன்னும் அதிகரித்தது. மனாலியிலிருந்து சொலாங் ( solang) பள்ளத்தாக்கு வழியாகத்தான் அதுல் டணல் செல்லவேண்டும். சொலாங் பள்ளத்தாக்க்கில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் வண்டியை நிறுத்தவில்லை. மாலை ஐந்து மணியளவில் அதுல் டணல் சென்று சேர்ந்தேன்.
Atul Tunnel or Rohtang Tunnel
இது மனாலியிலிருந்து 28 கிலோ மீட்டர்கள் தூரத்தில் உள்ளது. ஒரு மணி நேரப்பயணம். கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில், rohtang pass க்கு அடியில் போடப்பட்டுள்ள டணல் இது . இதன் நீளம் ஒன்பது கிலோ மீட்டர்கள் . இது மனாலியிலிருந்து லே செல்லும் வழியில் அடிக்கடி பனி சரிவிற்க்கு ஆளாகும் rohtang pass ஐ தவிர்க்க உதவுகிறது. பயண தூரத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகிறது.
ஏற்கனவே ஈரமான உடையுடன் நடுக்கிக்கொண்டிருந்த எனக்கு அதுல் டணலில் நுழைந்ததும் குளிர் பல மடங்கு அதிகமானது. குளிர் சாதனப்பெட்டியில் நுழைந்தது போல் இருந்தது. ஒரு கிலோமீட்டருக்குள் திரும்பிவிட்டேன். டணலுக்குள் வண்டியை நிறுத்தவோ திருப்பவோ கூடாது என கட்டுப்பாடுகள் இருந்தும்.
மோட்டார் சைக்கிளை ஏழு மணியளவில் ஒப்படைத்துவிட்டு விடுதிக்கு சென்று சூட்கேஸை எடுத்துக்கொண்டு ஒன்பது மணிக்கு பேருந்தில் அமர்ந்தேன். வானம் தெளிவாக இருந்ததால் நிலவொளியில் பனிச்சிகரங்கள் மின்னின.
இரவு நேரத்தில் மலைப்பாதையில் பயணம் செய்வது சிறிது கவலை அளித்தது. பேருந்து புறப்பட்டு சிறிது நேரத்திற்க்குள் ஓட்டுனர் வண்டியின் பிரேக்கில் ஏதோ பிரச்சனை என்று ஓரங்கட்டி நிறுத்தினார். Work shop-ற்க்கு போன் செய்து பேசினார். அந்த பிரச்சனையை சரிசெய்ய work shop- ற்க்கு வண்டியை எடுத்து செல்லவேண்டும் என்றும் குலுவில் வேறு பேருந்து மாற்றி தருவதாகவும் பேசிக்கொண்டனர். வண்டி குலு வரை மிக மெதுவாகச் சென்றது. இந்த புது சிக்கலால் கவலை அதிகமானது.
குலுவில் வேறு பேருந்தில் உடைமைகளை மாற்றி வைத்துவிட்டு அதில் அமர்ந்தோம். இனி பிரச்சனை ஏதும் இருக்காது என்ற நம்பிக்கையுடன் சற்று கண்ணயர்ந்தேன். இரவு பனிரெண்டு மணி இருக்கும். மறுபடியும் ஏதோ சலசலப்பு. ஓட்டுனரும் நடத்துனரும் சத்தமாக பேசிக்கொண்டிருந்தனர். வண்டி நின்றிருந்தது. சிறிது நேரத்தில் மெதுவாக புரிய ஆரம்பித்தது. வழியில் மண் சரிந்தோ, மரம் விழுந்தோ பாதை மூடிவிட்டது. வாகனங்கள் செல்ல இயலாது. இதை ஏதோ மிகச் சாதாரணமான நிகழ்வு போல நடத்துனர் சொன்னார். காலையில் பாதை சரி செய்யப்பட்டதும் செல்லலாம் என்றார்.
மாலைதான் விமானம் என்பதால் பிரச்சனை இருக்காது என நினைத்தேன். எனக்கு பின் சீட்டில் ஒரு தமிழ்க்குடும்பம் இருந்தது. அவர்களுக்கு நடப்பது ஒன்றும் புரியவில்லை. குடும்பத்தலைவர் தனக்குத்தெரிந்த அறைகுறை இந்தியில் ஓட்டுனரிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அவர்களுக்கு நான் தமிழ் என்று தெரியாது. நானும் சண்டிகரிலிருந்து விமானத்தை பிடிக்கத்தான் பேருந்தில் பயணம் செய்கிறேன் என யூகித்து என்னிடம் ஆங்கிலத்தில் பேசினர். அவர்களுக்கு காலை விமானம். அதற்க்குள் சண்டிகர் சென்றாக வேண்டிய கட்டாயம். உதவ நினைத்து, சண்டிகர் செல்ல வேறு பாதை ஏதாவது உள்ளதா என ஓட்டுனரிடம் விசாரித்தேன். கார்கள் செல்லக்கூடிய மாற்று வழி ஒன்று உள்ளதாக சொன்னார். அதில் பேருந்துகள் செல்ல இயலாது. நடத்துனரிடம் பேசி வாடகைக்கார் ஒன்றை ஏற்பாடு செய்து அந்த தமிழ் குடும்பத்தை வழி அனுப்பி வைத்தேன். மணி ஒன்றை தாண்டி இருந்தது . பாதை எப்பொழுது சரியாகும் என தெளிவாக தெரியவில்லை. நடத்துனர் காலை ஒன்பது, பத்து ஆகிவிடும் என்றார். இரவை எப்படி கழிப்பது. எங்கு உறங்குவது. பாதை சரியாகி நேரத்திற்க்கு விமான நிலையம் சென்று சேர முடியுமா என பல விடைதெரியாத கேள்விகள் எழுந்தன.
பஞ்சாபி இளைஞன் ஒருவன் பேச்சு கொடுத்தான். நாமும் வாடகைக்கார் வைத்துக்கொண்டு செல்லலாமா என கேட்டான். வாடகைக்காருக்கு எட்டாயிரம் ரூபாய் செலவாகும். நான்கு பேர் சேர்ந்து செல்லலாம் என்றான். இன்னொரு இளைஞனும் இளைஞியும் எங்களுடன் இணைந்து கொண்டனர்.
வாடகைக்கார் வந்தது. மாருதி ஆல்டோ. அதைப்பார்த்ததும், கார் வாங்கும் போது safety features, crash test results என்று ஆராய்ச்சி செய்து வாங்குகிறோம்; ஆபத்தான மலைப்பாதையில் இப்படி ஒரு பாதுகாப்பற்ற வண்டியா என பயம் அதிகரித்தது. ட்ரைவருக்குப் பக்கத்தில் அந்த பெண்ணும்
பின் சீட்டில் நாங்கள் மூவரும் அமர்தோம். ஓட்டுனரிடம் “ சகோதரா, தயவு செய்து சற்று மெதுவாக, பாதுகாப்பாக செல்லவும்” என இந்தியில் சொன்னேன். உதவி செய்ய வந்தவனிடம் கட்டளையிடுகிறானே - என்பது போல ஒரு பார்வை பார்த்தான். பின் சீட்டில் மூன்று பேருக்கு இடம் போதவில்லை. அரை சீட்டில் அமர்ந்திருப்பது போல் தோன்றியது.
ட்ரைவர், நான் சொன்னதை காதிலேயே வாங்காததுபோல் சர்ரென்று வேகத்துடன் வண்டியை கிளப்பினான். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. புறப்பட்டு இரண்டு நிமிடத்திற்க்குள் மொபைலை எடுத்தான். வலது கையில் ஸ்டியரிங்கை இயக்கிக்கொண்டே இடது கையினால் தொடுதிரையில் மேலும் கீழும் தேடி யாருக்கோ போன் செய்தான். விடியற்காலை இரண்டு மணிக்கு யாரிடம் பேசுகிறான் என எரிச்சல் ஏற்பட்டது .பேசிக்கொண்டே, ஒரே கையில், அதே வேகத்தில் வண்டியை ஓட்டினான். அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் கால் செய்து கொண்டே இருந்தான். என்னுடைய பயம் புதிய உச்சத்தை தொட்டது. உயிரோடு சண்டிகர் சென்று சேருவோமா என சந்தேகம் வந்தது. வண்டி மலைப்பாதையில் உருண்டு முடிவு வருமா, எதிரில் வரும் வண்டியில் மோதி வருமா. எதில் வலியும் துயரமும் குறைவாக இருக்கும். அப்படி ஏதாவது நடந்தால் குடும்பத்தை எப்படி தொடர்பு கொள்வார்கள். அது அவர்களுக்கு எவ்வளவு அதிர்ச்சியாக இருக்கும். அவர்களின் எதிர்காலம். இப்படி மனதில் பல எண்ணங்கள் ஓடின. ஒரு கட்டத்தில் வழியில் நிறுத்தச்சொல்லி இறங்கிக் கொள்ளலாமா என்று கூட தோன்றியது. இந்த வண்டியில் பயணம் செய்ய முடிவெடுத்த முட்டாள்தனத்திற்க்காக வருந்தினேன். இதிலிருந்து தப்பித்தால் இனி இதுபோன்று தவறு செய்யக்கூடாது என நினைத்துக் கொண்டேன்.
மண்டி என்ற இடத்தில் மாற்றுப்பாதை, வழக்கமான அகலமான பாதையில் இணைந்தது. மற்ற மூவரும் நல்ல தூக்கத்தில் இருந்தனர். விடியற்காலை நான்கு மணி. அந்த ட்ரைவர் மொபைலில் பேசுவதை நிறுத்தியிருந்தான். அவனிடமிருந்து சுத்தமாக சத்தமே இல்லை. அவனின் அமைதியைப் பார்த்து தூங்குகிறானோ என ஐயம் தோன்றியது. இது என்ன புதுப் பிரச்சனை. தூங்குவதைவிட மொபைலில் பேசிக் கொண்டே ஓட்டுவது எவ்வளவோமேல் என தோன்றியது. ஒருவேளை அதனால்தான் அவன் போன் பேசிக்கொண்டே இருந்தானோ?
வேகத்தில் செல்லும் கார். எதிரில் வரும் சரக்கு லாரிகள் மற்றும் வால்வோ பேருந்துகளின் கண் கூசும் வெளிச்சம். அவைகளின் மனதைப் பதறச்செய்யும் ஒலிப்பான்களின் சத்தம். இடிப்பது போல சென்று கடைசி வினாடியில் தப்பி மீண்ட கார். இப்படி நேரம் போனது. விடியும் வரை துளியும் உறங்கவில்லை. ஐந்து மணியளவில் வெளிச்சமாக ஆரம்பித்தது. ட்ரைவர் ஆறு மணிக்கு டீ சாப்பிட வண்டியை நிறுத்தினான். அப்பொழுதான் பயம் சற்று குறைந்தது. மலைப்பாதையும் முடிவுக்கு வந்துவிட்டிருந்தது.
ஒரு வழியாக ஒன்பது மணியளவில் சண்டிகர் செக்டார் 17 ல் இறக்கி விடப்பட்டேன் - உயிருடன். வண்டியிலிருந்து இறங்கியதும் அளவற்ற ஆனந்தம் ஏற்பட்டது. அது, கீர்கங்காவில் வெண் சிகரங்களுக்கு எதிரில் நின்றபோது - அந்த அற்புத கணங்களில் - தோன்றியதைவிட பல மடங்கு அதிகமான ஒன்று.
நிறைவு
.jpg)
.jpg)





