Wednesday, July 22, 2020

வாசிப்பு சவால்


சரியாக இரண்டு மாதங்கள் - அதாவது எட்டு வாரங்கள் - ஆகிவிட்டது. இப்படி ஒரு சவாலை எனக்கு நானே போட்டுக்கொண்டு. இது வழக்கமான impulsive( இதற்க்கு சரியான தமிழ் வார்த்தை என்ன?) முடிவு அன்று. நீண்ட காலமாக- சரியாக சொல்ல வேண்டுமானால் சுமார் முப்பது ஆண்டுகளாக - விட்டுப்போன ஒன்றை மீட்டெடுப்பதற்க்கான முயற்ச்சி.




இந்த புத்தகம் படிக்கும் வழக்கம் எப்படி ஆரம்பித்தது என யோசிக்கும் போது தெளிவில்லாமல் - மங்கலாக நினைவிற்க்கு  வருவது:

இந்த ஆர்வம் முதலில் எல்லாரையும் போல காமிக்ஸ் படிப்பதில்தான் ஆரம்பித்தது. பிறகு பி டி சாமியின் பேய் கதைகள் மற்றும் ஏழு கடல் , ஏழு மலை தாண்டும் இளவரசி, இளவரசன் சாகசக் கதைகள். அப்புறம் அம்மா எங்கள் ஊர் கிளை நூலகத்திலிருந்து எங்களை எடுத்து வர சொல்லி படிக்கும் வாஸந்தி, சிவசங்கரி, இந்துமதி , லக்‌ஷ்மி போன்ற பெண் எழுத்தாளர்களின் அறிமுகம். இந்துமதியின் தரை இறங்கும் விமானங்கள் மற்றும் சக்தி என்ற புரட்சிகரமான பெண்ணிய பாத்திர படைப்பும் இதை எழுதும்போது நினைவுக்கு வருகிறது.பின்பு நண்பர்கள் படிக்கும் ராஜேஷ்குமாரின் பாக்கெட் நாவல்கள் மீது பைத்தியமாக சில வருடங்கள். அடுத்து பருவ வயதின் தூண்டலால் ரகசியமாக ராஜேந்திர குமார், புஷ்பாதங்கதுரை மற்றும் பாலகுமாரன் போன்றவர்களின் எழுத்து.பின்னர் எப்படி என்று தெரியாமலேயே ஆதவன், அசோகமித்திரன், தி ஜானகிராமன், லா சா ரா என தீவிர இலக்கியம் மீது ஆர்வம் ஏற்பட்டு வாசிப்பு முதிர்ச்சி அடைந்தது. பத்தாம் வகுப்பிற்குள் படித்த புத்தகங்களை நினைத்தால் இன்றும் ஆச்சரியமாக உள்ளது. அந்த ஐந்து ஆண்களில் படித்ததைவிட அதற்க்கப்புறம் முப்பது ஆண்டுகளில் படித்தது குறைவோ என்ற ஐயம் ஏற்படுகிறது. மருத்துவ படிப்பில் நுழைந்த பின் அதை சரியாக தொடர முடியவில்லை. எவ்வளவோ முயன்றும். அது ஒரு குற்ற உணர்ச்சியாகவே மனதின் மூலையில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டிருந்தது. வெளியில் சொல்லாமல் பல முறை இதைப்போன்ற சவால்களை எனக்கு நானே இட்டுக் கொண்டும் பயனில்லை. இதுதான் இரண்டு மாதத்திற்க்கு முன் ஒரு நாள் சட்டென்று நடு ஜாமத்தில் அப்படி ஒரு வாட்ஸ் அப் பதிவிட்டதற்க்கான பிண்ணனி.

இந்த இரண்டு மாதத்தில் படித்தவை.
India after Gandhi, Heat and dust,கரம்சோவ் சகோதரர்கள்- 2nd volume,Papillon, Motorcycle diaries- Che, விசாரணை - காப்கா ,நண்பனின் தந்தை - அசோகமித்ரன். My name is Red ஐ படித்துக் கொண்டிருக்கிறேன்.

இரண்டு மாதமாக வாசிப்பில் ஏற்பட்ட முன்னேற்றத்தில் மிகவும் திருப்த்திகரமாக உணர்கிறேன். தினமும் ஏறக்குறைய இரண்டு மணி நேரங்கள் படிக்கிறேன். தமிழ் நாவல்களை மிக வேகமாக படிக்க முடிகிறது. சராசரியாக ஒரு நிமிடம் ஒரு பக்கத்திற்க்கு. ஆங்கில புத்தகங்களுக்கு இது இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வரை ஆகிறது. ஆரம்பத்தில் புரியாத வார்த்தைகள் அனைத்திற்க்கும் அர்த்தம் தேடியதில் நேரம் விரயமானது. இப்போது கதையோட்டத்தின் முக்கியமான வார்த்தையில் சந்தேகம் இருந்தால் மட்டுமே அகராதியை நாடுகிறேன்.பொதுவான நம்பிக்கைக்கு எதிராக, மெதுவாக படிப்பதை விட வேகமாக படிக்கும் பொழுதே மனது சிதறாமல் ஒரு முகத்துடன் கதையை சரியாக உள் வாங்கிக் கொள்ள முடிகிறது.

“நண்பனின் தந்தை”யில் ஒரு கதையை - பப்பாய் 1944- படித்துவிட்டு மனது இரண்டு நாட்களாக நிலையில்லாமல் தவித்தது. அப்பொழுதுதான் இந்த யோசனை தோன்றியது. நாம் ஏன் ஒரு மாதம் முழுவதும் ஒரு எழுத்தாளரின் ஆக்கங்களை மட்டுமே படிக்கக் கூடாது. தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரின் அனைத்து எழுத்தையும் ஒரு மாதத்திற்க்குள் முழுவதுமாக படித்துவிட இயலும். படித்தபின் அவர்களைப் பற்றி எழுதவும் ஆசை. பார்ப்போம்.
ஆகஸ்ட் மாதம் முதல் எனக்கு மிக பிடித்த அசோகமித்திரனிலிருந்து ஆரம்பிக்கலாம் என எண்ணம்.

இந்த மாதிரி ஆராய்ச்சி - ஆர்வம் பாடப்புத்தகங்களை படிக்கும் போகு ஏன் தோன்றவில்லை?


22 ஜூலை 2020,
சென்னை.