துரைப்பாக்கத்திலிருந்து பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள அங்கு செல்வதற்க்கு பல காரணங்கள். சென்னையிலேயே பசுமையான மரங்கள் அடர்ந்த பகுதி. அங்கிருந்து மெரினா வரை செல்லும் பாதை கடற்கரைக்கு அருகில் இருப்பதால் கடல் காற்றுடன் புத்துணர்ச்சியாக இருக்கும். இந்த பாதையில் ஓடுவதற்க்கு துணைக்கு நிறைய நபர்கள் இருப்பதால் உற்சாக மாகவும் இருக்கும். இருந்தாலும் இதையெல்லாம் விட முக்கியமான காரணம் - “அங்கு ஓடினால் நாய்கள் துரத்த வாய்ப்பு குறைவு” - என்பதே. நிறைய பேர் ஓடுவதை பார்த்து நாய்களுக்கு பழகி இருக்கும் - துரத்தாது ,கடிக்காது என ஒரு நம்பிக்கை. விடியற்க்காலை ஐந்து மணிக்கு ஆட்கள் அரவமற்ற - நாய்கள் நிறைந்த - வீதிகளில் ஓட ஒரு தனி தைரியம் வேண்டும். நம் ஊர்களில் ஒவ்வொரு தெருக்களிலும் குறைந்த பட்சம் பத்து பதினைந்து நாய்களாவது உள்ளன.
எங்கள் அடுக்கு மாடி குடியிருப்புக்கு எதிரில் எப்பொழுதும் ஐந்து நாய்களாவது ரோந்து பணியில் இருக்கும். மவனே ஒரு நாள் எங்கிட்ட மாட்டாமயா போய்டுவே என்று அவை நம்மை பார்த்து குரோதத்துடன் சொல்வதாக தோன்றும்.
நாய்கள் என்றாலே ஒரு அச்சம். சிறு வயதில் உறவினர் ஒருவரின் நாய் துரத்தியது மனதில் வடுவாக நிலைத்து விட்டது. சில வருடங்களுக்கு முன் நடந்த இன்னொரு நிகழ்ச்சி அதற்க்கு மேலும் வலு சேர்த்து விட்டது. வார நாட்களில் எங்கள் குடியிருப்புக்குள்ளேயே ஓடுவது வழக்கம். அப்படி ஓடிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு நாள், புலி அளவுக்கு உயரமும் ஆக்ரோஷமும் உள்ள ஒரு கருப்பு நாய் அதன் உரிமையாளரின் கையிலிருந்து கயிரை விடுவித்துகொண்டு என் மீது பாய்ந்து விட்டது. மில்லி மீட்டர் இடை வெளியில் அதன் கூர்மையான கோரை பற்கள் மின்னியது இன்றும் மனதை நடுக்குகிறது. மயிரிழையில் தப்பினேன்.
“ஓடும் நாயை பாத்தால் துரத்தும் நாய்க்கு சந்தோசஷம்னு” சொல்வது உண்மைதான்.
நாய் துரத்தும் போது ஓடக் கூடாது. எதிர்த்து நின்று அதை நாம் கடிக்க போவது போல - குறைந்த பட்சம் நடிக்கவாவது வேண்டும்.
நான் தான் இப்படி என்றால் பிராஞ்சலி இதற்க்கு ஒரு படி மேல். அவளுக்கு நாய்களை மட்டுமின்றி அதை வளப்பவர்களையும் சுத்தமாக பிடிக்காது. அடுக்குமாடி குடியிருப்புகளில் வளர்ப்பு பிராணிகளை அனுமதிக்க கூடாது. அடுத்தவர்களின் சுதந்திரத்தில் தலையிடுகிறார்கள் - என கன்னா பின்னாவென்று திட்டுவாள். ஒன்றரை வயது மகளும் விளையாடும் போது பார்க்கில் யாராவது நாய்களுடன் வந்தால் பயந்து ஓடி வந்து நம்மிடம் தஞ்சமடைவாள். இப்படி குடும்பமே காட்டு மிராண்டியாக - வாயில்லா ஜீவன்களிடத்தில் பகைமை பாராட்டுவது மனதை வருத்தவே செய்கிறது.
அவைகள் மீது அன்பு செலுத்த வேண்டும் என்ற எண்ணம் சில வருடங்களாகவே மனதின் ஓரத்தில் துளிர்விட தொடங்கி விட்டது. வாய் பேசமுடியாத ஒரு மனிதனுக்கும் நாய்க்குமான அன்பை சொல்லும் துர்கனேவ்வின் முமு( mumu) கதையை படித்து கண்ணீர் விட்டு அழுதது அந்த எண்ணத்தை மேலும் வளர்த்து விட்டது. மேலும் வளர்ப்பு பிராணிகளைப் பற்றி சாரு, ஜெயமோகன் போன்றோர்களின் பதிவும் மனதை மெல்ல மாற்றத் தொடங்கியது.
இவையெல்லாம் இப்படி இருக்கும் போது
சில வாரங்களாகவே - ஒரு அதிசயம் - ஒவ்வொரு ஞாயிறன்றும் நிகழ்கிறது. இன்றைக்குத்தான் எனக்கு உரைத்தது.
காலை ஐந்து மணிக்கு வழக்கம் போல ராஜாஜி பவனுக்கு அருகிலுள்ள ஒரு மரத்தடியில் காரை நிறுத்திவிட்டு ஓட்டத்தை ஆரம்பிக்கும் போது, ஒரு நாய், நூறு மீட்டர் தூரத்திலிருந்து மெதுவாக ஓடி வந்து வாலை ஆட்டிக்கொண்டு என்னை சுற்றியது. ஓடினால் துரத்துமோ என பயந்து சிறு கல்லை எடுத்து விரட்டினேன். பயந்து சிறிது தூரம் விலகி மீண்டும் என்னருகில் வந்து பாசத்துடன் வாலை ஆட்டியது. அப்பொழுதான் இதே போன்று தொடர்ந்து சில வாரங்களாக நடப்பது நினைவுக்கு வந்தது. அதே நாய். வெளிறிய பழுப்பும் வெள்ளையும் சேர்ந்த நிறம்.
ஓடும் போது சிறிது இடைவெளி விட்டு பாது காவலன் போல சில கிலோ மீட்டர்கள் வரை தொடரும். அதற்க்கப்புறம் காணாமல் போய்விடும். காட்டு விலங்குகளுக்கு இருப்பது போல நாய்களுக்கும் எல்லைகள் உண்டா என தெரியவில்லை. மெதுவாக ஓட ஆரம்பித்தேன். அது வழக்கம் போல இடைவெளி விட்டு தொடந்தது. மனதுக்குள் சிறு கலக்கம் இருந்தாலும் இரக்க உணர்வே மேலிட்டது. சிறிது தூரம் சென்றவுடன் வழக்கம் போல காணாமல் போனது. ஓட்டப் பயிற்ச்சி முழுவதும் அதன் நினைவு திரும்ப திரும்ப வந்தது. எத்தனையோ பேர் அந்த பாதையில் ஓடும்போது என்னை மட்டும் தேடி வந்து வாலாட்டியது. பின் தொடந்து வருகிறது. மனது நெகிழ்ந்தது. போன ஜன்மத்து விட்ட குறை தொட்ட குறையோ என்னவோ.
ஓட்டத்தை முடித்து விட்டு காரை நெருங்கும் போது மீண்டும் அருகிலிருந்து வாலாட்டிக் கொண்டு ஓடி வந்தது. அதன் கண்களில் கருணை, அன்பு மிளிர்ந்தது. அது சொல்ல வந்தது புரிந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை. அதன் கண்களை அன்புடன் நோக்கினேன். என்னுடைய செய்கைகளுக்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடை பெற்றேன். அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கும் போது ஏதாவது வாங்கி செல்ல வேண்டும். ஏதாவது யோசனை சொல்லுங்கள்.
Mind you- today is feb 14 th !


No comments:
Post a Comment