Tuesday, March 7, 2017

சிறு கதை


                                                       சிவப்பு ரோஜா


பிப் 14, காதலர் தினம்.

நேற்றிலிருந்தே ஒரு விபரீதமான  எண்ணம். இந்த வருடமாவது  இச்சிறப்பு நாளை கொண்டாடியே தீர்வது , காதல் பரிசு கொடுத்து விடுவது  , என்பதே அது.






முதலில் அபத்தமாக தோன்றினாலும் நேரம் போகப் போக இதில் என்ன தப்பு. இந்த உலகில் மிக இனிமையான, அற்புதமான உணர்வு காதல். அதற்காக ஒரு நாளை தேர்வு செய்து கொண்டாடுவதில் என்ன தவறு? இது ஒரு மொழி, இனம் ,கலாச்சரம் கடந்த கொண்டாட்டம் . இப்படிப்பட்ட ஒரு சுவையான நினைவுச் சுழலில் சிக்கி அடி ஆழம் இழுத்து செல்லப் பட்டேன்.

காதல் திருமணம் செய்திருந்தாலும் , எல்லாரையும் போலவே '' என்ன nonsense - valentine day , நம்ம பண்பாட்டுக்கு ஏற்றதல்ல இது ''
என்று சப்பை கட்டு காரணத்தையே பத்து ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி சொல்லி தன்னைத்தானே முட்டாளாக்கிக் கொண்டாகிவிட்டாயிற்று .

இப்பொழுது திடீ ரென்று பரிசு வாங்கி சென்றால் ,மன  நலம் பாதிக்க பட்டவனை பார்ப்பது போல் பார்ப்பாள் , மனைவி . இல்லையென்றால் இதை  ஏதோ பெரிய குற்றத்தை மறைக்க செய்யும் சிறு தந்திரமாக, சந்தேகத்துடன் பார்ப்பாள் .எப்படி இருந்தாலும் சிறிது நேரத்தில் உண்மை அறிந்து மகிழ்சி உண்டாகும். இது ஒரு மறக்க முடியாத நாளாகிவிடும். மறுபடியும் அதே சுவையான சுழல் !

அதைப்பற்றிய நினைப்பே மனதை இளமையாக்கியது. உற்சாகமும் பரபரப்பும் கூடிக்கொண்டது.

என்ன பரிசு வாங்குவது ?

நகை , டிரஸ், கிரீட்டிங் கார்டு ......? ??

இது எல்லாமே old fashion ஆக தோன்றியது. புதுமையாக என்ன  செய்யலாம்?

candle light dinner ? movie ?? இதிலெல்லாம் surprise element குறைந்துவிடுமே ?

ஏற்கனவே தமிழ் நாட்டு அரசியல் பரபரப்பால் கசங்கி போன மூளையை மீண்டும் கசக்க எத்தனிக்கும் பொது ...

''என்ன பரிசு தருகிறோம் என்பது முக்கியமல்ல , பரிசு தருகிறோமா இல்லையா என்பதுதான் முக்கியம் '' என்ற ஸ்வாமி காதலானந்தாவின் அறிவுரை நினைவுக்கு வந்தது.

online ல் பூங் கொத்து ஆர்டர் செய்து , surprise delivery செய்தால்  எப்படி இருக்கும் ?

அவசர அவசரமாக அருகிலுள்ள online flower shops களை google ல் தேடினேன். ஏற்கனவே தாமதமாகிவிட்டதால் ஆர்டர் செய்ய இயலவில்லை .

மறுநாளும் வந்தது.

காதலர்தினம் சூடான எலும்பை உடைய செய்யும் (Breaking News !) செய்திகளால் அரசியல்  தினமாக பரபரப்பாக கழிந்தது. வேலை பளுவில் மாலை வரை நினைவே இல்லை. வீட்டுக்கு திரும்ப தயாராகும் நேரத்தில்தான் மறுபடியும் அந்த இனிப்பான சுழல் நினைவுக்கு வந்தது.

அடுத்த அரைமணிநேரத்தில் பெசன்ட் நகரிலுள்ள ஒரு பூக்கடையில் நான்.

கடையில் வியாபாரம் சுறுசுறுப்பாக இருந்தது. நிறைய இளைஞி , இளைஞர்கள் . தயக்கமும் வயதாகிவிட்டதே என்ற தாழ்வுமனப்பான்மையும் மனதின் ஓரத்தில் முளை விட்டாலும் , இப்போதாவது வந்தோமே என்று அவற்றை ஓரங்கட்டினேன்.

வித வித மான பலநிற பூக்கள் மகிழ்சியுடன் புன்னகைத்தன .

அதிக குழப்பமில்லாமல் சிவப்பு கலர் ரோஜாப்பூங் கொத்தை காதலின் சின்னமாக தேர்ந்தெடுத்தேன்.

சரியாக மனைவியிடமிருந்து போன் ''எப்போ வருவீங்க , எவ்வளவு நேரமாகும்'' என்று.

ஊகி த் து விட்டா ளோ ?

சே சே ...வாய்ப்பே இல்லை ... என நினைத்துக்கொண்டே '' கொஞ்சம் லேட் ஆயிடுச்ச்சு , அரை மணி நேரத்தில் வந்து விடுவேன் '' என போனை துண்டித்தேன்.

முதல் காதல் பூத்த இளைஞனைப் போல நெஞ்சின் துடிப்பு வேகமெடுத்து வீட்டை நோக்கி பயணமானேன்.

வழி நெடுக பூங்கொத்தை கொடுத்தவுடன் அவளின் response எப்படி இருக்கும்? என்று ஒரு 50, 100 விதங்களில் கற்பனை செய்து பார்த்தேன். இருந்தாலும் உறுதியாக சொல்ல முடியவில்லை. அந்த சஸ்பென்ஸ் எதிர்பார்ப்பையும் ஆர்வத்தையும் அதிகமாக்கியது.

வீடு வந்துவிட்டது.

பூங்கொத்தை கையில் தூக்கி பிடித்தபடி நடந்தேன், புன்முறுவலை மறைக்க இயலாமல்.

டிங் ...டிங் ....டிங் .

அழிப்பு மணியை அமுக்கினேன், வழக்கத்திற்கு மாறாக. (என்னிடம் உள்ள இரண்டாவது சாவியால் வீட்டை திறப்பதுதான் வழக்கம். )

உச்சகட்ட காட்சியை காணும் ரசிகனா க , இருதய துடிப்பு தாறுமாறாகியது.


மனைவி கதவை திறந்தாள் .


சிரித்த முகத்துடன் ஆர்வமாக ,அவள் முகத்தின் உணர்ச்சியை படிக்க முயற்சித்தேன் .

நான் கற்பனை செய்த்த 100 விதங்களிலிருந்தும் முற்றிலும் வேறாக இருந்தது அவள் முகம்.

அதிர்ச்சியா???

கோபமா???

ஏதாவது தப்பு செய்து விட்டேனா?

பலவாறு யோசித்து குழப்பத்தில் ...."Happy Valentine 's day " என்று சொல்ல சில வினாடிகள் தாமதித்து விட்டேன் .

அதற்க்குள் கோபத்துடன் ஒரு கூச்சல் அவளிடமிருந்து  .


" கல்யாணமான ஆம்பளைன்னு கூட தெரியாம யாரு உங்களுக்கு Red Rose கொடுத்தது "


Red Rose ஏ தோற்க்கும் அளவிற்கு கோபத்தில் சிவந்தது அவள் முகம்.



- புத்தன் ராஜரத்தினம் .



1 comment: